இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மதிமுக்தீஸ்வரர்
இறைவி :அருள்மிகு பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி அம்மன்
தல மரம் :மந்தாரை
தீர்த்தம் :சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேசுவரர் திருக்கோவில், செதலபதி, தல வரலாறு.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம். இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்குப் பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் ராமன். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
தல வரலாறு
ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்றுகொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும்படி கட்டளையிட்டு, நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார். பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்துக்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயணியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்துகொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட, அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில், செதலபதி, பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம். திருவாரூர் மாவட்டம் – 609 503.
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்:
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்கு செல்லலாம்.